வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

0
73

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா சமூக பரவலைத் தடுக்கும் பொருட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் திட்டமிட வேண்டும் எனக் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

பெரும்பாலான IT மற்றும் BPO நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னர் ஊரடங்கு தொடருமா, அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் IT ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் “கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலை செய்யும் பாணி மாறிவிட்டது. உலகெங்கிலும் 80 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்கின்றனர். நம் நாட்டிலும், ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இம்மாதம் இறுதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நீட்டிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து பணி செய்யும் ஐ.டி மற்றும் பி.பி.ஓ ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம். ஆன்லைன் சுகாதார சேவைகளைத் தென் மாநிலங்கள் சிறப்பாகக் கையாளுகின்றன. மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும்.

ஊரடங்குக்குப் பின் பணி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க, பாரத் நெட் பிராட்பேண்ட் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்கக் குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K