2020 – 21ம் கல்வியாண்டு ரத்தா..? மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

0
66

நடப்பு கல்வியாண்டு ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்‌ அளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு (2020 – 21) தொடங்கிய நிலையிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால், கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து எந்த ஒரு நிலையான முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால், 2020 – 21ம் கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, மாணவர்களின் கல்வி நலன் கருதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வரும் 21ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து வகுப்புகளை எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், நாடு முழுவதும் 12 முதல் 15% மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதால், நடப்பு கல்வியாண்டு பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “இந்த 2020 – 21 கல்வியாண்டை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், திக்‌ஷா, ஸ்வயம் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், சமூக வானொலி மூலமாகவும் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

author avatar
Parthipan K