அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? ஓபிஎஸ்-க்கு பறந்த மாவட்ட செயலாளர்களின் கடிதம்!

0
77

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனித்தனியே ஆலோசனை செய்து வருகிறார்கள்.

இதனடிப்படையில், ஓபிஎஸ் உடனான ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனையில் எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தற்போதுள்ள சூழ்நிலையில், தள்ளிவைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து ஓபிஎஸ்க்கு மாவட்ட செயலாளர்கள் எழுதிய கடிதத்தை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் வாசித்துக்காட்டினார்.

அதில் அவர் தெரிவிக்கும் போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். பொதுக்குழுவில் கடந்த கால நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழுவுக்கு சிறப்பு அறிவிப்பாளர்களை அழைப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. ஆனாலும் பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்காதது ஏன்? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னறிவிப்பின்றி ஒற்றை தலைமை தொடர்பாக கருத்துக்கள் எதற்காக தெரிவிக்கப்பட்டன என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.

ஒற்றை தலைமை சர்ச்சை காரணமாக, கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் இடையே குழப்பம் நிலவி வருகிறது. கூட்டத்திற்கான காரணத்தை நிர்ணயம் செய்து நடத்துவது அவசியமாகிறது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதோடு இது குறித்து மேலும் பேசிய வைத்திலிங்கம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாக ஆதரித்து இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.

15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலையில் இருக்கிறார்கள், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சர்வாதிகார போக்குடன் ஒற்றை தலைமையை கொண்டு வர முயற்சி செய்கிறது.

கட்சியை உடையாமலிருக்க வேண்டும் என்பதே பன்னீர்செல்வம் தரப்பின் எண்ணமாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து பதில் வந்த பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வைத்திலிங்கம் கூறியிருக்கிறார்.