எடப்பாடி பழனிச்சாமி தேவர் ஜெயந்திக்கு செல்லாததன் ரகசியம் என்ன? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்!

0
91

முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை போல இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லவில்லை என்றும், சென்னை நந்தனத்தில் இருக்கின்ற தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நந்தனத்தில் இருக்கின்ற தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போது காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்குமாறு சென்னை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு வழங்கினார்.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் சென்னை ஆக இருந்தாலும் ராமநாதபுரமாக இருந்தாலும் தேவர் ஐயாவுக்கு புகழ் மாலை செலுத்த வேண்டும். அந்த விதத்தில் நந்தனத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். கடந்த காலங்களிலும் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயம் பசும்பொன்னிற்கு சென்று மரியாதை செலுத்துவோம். அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்று கூறினார்.

கோவை கார் கொண்டு வெடிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரையில் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறோம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திருக்கிறோம், பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடி இருக்கிறோம்.

இதே போல பன்னீர் ஏதாவது செய்திருக்கிறாரா? சிம்பிளாக ஏதோ அறிக்கை விட்டிருக்கிறார். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்ததே உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகத்தான் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியா அல்லாமல் போனதற்கு பின் முதல்வரின் அனைத்து பொறுப்புகளையும் பன்னீர்செல்வம் அவர்களே கவனித்துக் கொண்டார். அதில் விஜயபாஸ்கர் பங்கு எதுவும் இல்லை. சசிகலா, பன்னீர்செல்வம் உள்ளிட்ட இருவரும் குற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில் தான் விசாரணை அறிக்கையின் முடிவே இருக்கிறது.

ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கையில் கடைசியில் இடம் பெற்று இருந்த திருக்குறளை பார்த்து தமிழகமே கண்ணீர் சிந்தக்கூடிய நிலை தான் இருக்கிறது. என் மீது எந்த புகார் வந்தாலும் நான் சட்டப்படி சந்திக்க தயார் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.