நாங்கல்லாம் யாரையும் பார்ப்போம்! எங்க கிட்டேயேவா சட்டசபையில் பன்னீர்செல்வம் பளிச்!

0
70

சட்டசபையில் நேற்றைய தினம் கைத்தறி வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உரையாற்றிய அதிமுக சபை உறுப்பினர் சேகர் ஜல்லிக்கட்டு நாயகன் என்று பன்னீர்செல்வத்தை புகழ்ந்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என தெரிவிக்கிறார். அவர் எத்தனை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றார்? எத்தனை காளைகளை அடக்கினார்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் செங்கோட்டையன் ஜல்லிக்கட்டு நடக்கவே, நடக்காது, என்ற சூழ்நிலையில். அதற்கான சட்டம் இயற்றி அதனை நடத்திக் காட்டியவர் பன்னீர்செல்வம் அதன் காரணமாக தான் அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்கிறோம் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் மூர்த்தி 2005ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரையில் ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு, உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் அந்த தடை நீக்கப்பட்டது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு அதிமுக அமைச்சர் மூர்த்தி, சாமிநாதன், செங்கோட்டையன், உள்ளிட்ட மூவரும் உறவுக்காரர்கள் இதனால் தங்களுக்குள் விவாதம் நடத்துகிறார்கள். இந்த பிரச்சனையை இத்தோடு விட்டு விடுங்கள் என தெரிவித்தார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து பேசத்தொடங்கினார். அதாவது, தாம் இளம் வயதாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கினேன் என தெரிவித்தார்.

திமுக, காங்கிரஸ், கூட்டணி அரசு மத்தியிலே இருந்தபோது காளைகளை விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் சட்டசபையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று அவசர சட்டம் நிறைவேற்றி, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, அது சட்டமாக பிறகு மறுபடியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஜல், ஜல், என்று நடத்தப்பட்டதாக தெரிவித்தார் பன்னீர்செல்வம்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் செல்வபெருந்தகை ஜல்லிக்கட்டு போட்டியை திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தடை செய்யவில்லை.

பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் சென்று அதன் காரணமாக, நீதிமன்றம்தான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது. மறுபடியும் போட்டிகள் நடைபெற அதிமுக அரசு காரணமல்ல பொது மக்கள் போராட்டத்தால் மீண்டும் போட்டிகள் சாத்தியமானது என கூறினார்.