ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி! 28ல் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா!

0
93

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாதிப்பதற்கு இந்திய அணி வீரர்கள் நேற்று தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்தார்கள்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரக எமிரேட்ஸில் வருகின்ற 27ஆம் தேதி ஆரம்பமாகிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்திய அணி பங்குபெறும் கடைசி தொடர் இது என சொல்லப்படுகிறது.

இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் வருகின்ற 28ஆம் தேதி பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் விதத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று துபாயில் பயிற்சியை ஆரம்பித்தார்கள்.

இதற்கு முன்னர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. அப்போது சாகல், சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, உள்ளிட்டோர் ஆப்கானிஸ்தான் வீரரான ரஷித் கானிடம் சென்று நலம் விசாரித்தனர்.

இந்திய அணி வீரர் கோலி ரஷீத் கானிடம் உரையாடினார். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசமிடம் கோலி கை கொடுத்து வழியனுப்பி வைத்தார் என சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நோய் தொற்று பாதிப்பினால் அவதிப்படுவதால் துபாய் செல்லவில்லை.

ஜிம்பாப்வே தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட லட்சுமண், லோகேஷ் ராகுல், தீபக், ஆவேஸ் கான், உள்ளிட்டோருடன் இணைந்து ஜிம்பாப்வேயிலிருந்து துபாய் வந்தடைந்தார்.

ஆசிய கோப்பை தொடரில் டிராவிட்டுக்கு பதிலாக தற்காலிக பயிற்சியாளராக லட்சுமணன் செயல்படுகிறார் நேற்று முன்தின பயிற்சியை லட்சுமணன் மேற்பார்வையிட்டார் என சொல்லப்படுகிறது.