வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்!

0
77

தமிழகத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில், மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது, அதற்கான பணிகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது 18 வயதை அடைந்தவர்கள் எல்லோரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு இதன் மூலமாக தமிழகத்தில் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. அத்தோடு பெயர் திருத்தம், பெயர் நீக்கம், தொகுதிக்குள் முகவரி மாற்றம், தொகுதியில் இருந்து இடமாற்றம், உள்ளிட்ட திட்டங்களை செய்வதற்கும் வாக்காளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டு வருகின்றது.

இப்படியான நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியிடப்படுகிறது, இதற்காக நவம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்து கருத்து கேட்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும். அந்த விதத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை செய்வதற்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்தக் கூட்டமானது வரும் 29ஆம் தேதி பகல் 12 மணி அளவில் தலைமைச்செயலகத்தில் நடைபெற இருக்கிறது, இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் நீக்கம் குறித்த அந்தந்த கட்சியின் கருத்துகளை அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.