விஷ்ணு கோவில்களில் வழிபடவேண்டிய நடைமுறைகள்.

0
126

விஷ்ணு கோவிலில் நுழைந்தவுடன் நம்முடைய கண்களில் பிரம்மாண்டம் தான் தென்படும். கோபுரம், ராஜகோபுரம், என்று சொல்லக்கூடிய அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும்.

கோவிலுக்கு வர இயலாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என தெரிவிக்கிறார்கள்.

கோவிலிலுள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடமாகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நம்முடை உடலிலுள்ள கோபம், காமம், பேராசை, பற்று, அகங்காரம், ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்குவதற்காக செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது என சொல்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பம்.

இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள்.

அதற்கடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கிறது. இவரை வணங்கிய பிறகுதான் மூலஸ்தானத்திலுள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.

அதன்பிறகு இராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள், உள்ளிட்டோரை தனித்தனியே வணங்க வேண்டும் என்கிறார்கள்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது சற்று நேரம் அமர்ந்து இறைவா, நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன் இதில் எனக்கு எது தேவை எது தேவையில்லை என்பது உனக்கு நன்றாகத் தெரியும்.

அதனடிப்படையில் வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும், அதன் பின்பு மறுபடியும் கொடிமரத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து பெண்களாக இருந்தால் 2 கை,2 கால் தலை உள்ளிட்ட 5 உறுப்புகள் தரையில் படுமாறு பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியாக சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து விட்டு வெளியே வர வேண்டும் என்கிறார்கள்.