ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

0
101

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள உகான் பகுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு  நாடுகளுக்கும் பரவி பலக்கட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமாக செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்றானது உருமாறியது. இந்த வகை உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாம் அலை உருவாக காரணமாக அமைந்தது. முதல் அலையை காட்டிலும் கொரோனாவின்  இரண்டாம் அலை நாட்டை மிக மோசமாகப் பாதித்தது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமானது. மேலும் கொரோனா வைரசை காட்டிலும் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில்  கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது.

இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒமிக்ரானின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. ஒமிக்ரானின் இந்த புதிய மாறுபாட்டுக்கு பிஏ-2 என பெயரிடப்பட்டது. இந்த புதிய மாறுபாடு தொடர்பாக இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஒமிக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த பிஏ-2 வைரஸ் ஒமைக்ரானை காட்டிலும் அதிகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பிஏ-2 வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K