அவருக்கு இப்போது நிச்சயமாக ஓய்வு தேவை! ரவி சாஸ்திரி வழங்கிய அட்வைஸ்!

0
68

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான விராட் கோலி கடந்த 2011ஆம் ஆண்டு முதன்முதலாக இந்திய அணியில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு முன்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தார்.

இந்த நிலையில், அவர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு எந்த ஒரு போட்டியிலும் சதமடிக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அவர். நேற்று முன்தினம் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து நடப்பு ஐபிஎல் தொடரில் 7 ஆட்டங்களில் 119 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் 33 வயதான விராட் கோலிக்கு தற்போது ஓய்வு தேவை என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, தொடர்ச்சியாக நோய் தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் முடங்கிக் கிடப்பதால் விராட் கோலி அதிக மன அழுத்தத்திலிருக்கிறார். இங்கே யாருக்காவது ஓய்வு தேவையென்றால் அது அவருக்குத் தான்.

அது 2 மாதங்களாக இருந்தாலும் சரி அல்லது ஒன்றரை மாதங்களாக இருந்தாலும் சரி, இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு பிறகு இருந்தாலும் சரி, அதற்கு முன்பாக இருந்தாலும் சரி, நிச்சயமாக அவருக்கு ஓய்வு முக்கியம்.

அவரால் இன்னும் 6 அல்லது 7 வருடங்கள் கிரிக்கெட் விளையாட இயலும். மனச் சோர்வு காரணமாக, கிரிக்கெட்டை விட்டு விரைவாக வெளியேறும் நிலையை உருவாக்கி விடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார் ரவிசாஸ்திரி.

ஆகவே அவர் சற்று ஓய்வெடுத்து விட்டு வந்தால் தான் அவரால் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலும் என்று நான் கருதுகிறேன். பயிற்சியாளராக இருந்தபோது நான் அவரிடம் முதலில் தெரிவித்தது என்னவென்றால், சக வீரர்கள் மீது கருணை காட்ட வேண்டும்.

நீங்கள் எதையாவது வலுக்கட்டாயமாக திணித்தால் அது அந்த வீரர் சிறப்பாக செயல்படும் தன்மையை இழப்பதற்கு
அதுவே காரணமாகிவிடும். அதனால் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள் என்று தெரிவித்திருந்தேன் என கூறியிருக்கிறார் ரவி சாஸ்திரி.