வாணியம்பாடி திருப்பதி கங்கையம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி
வாணியம்பாடி திருப்பதி கங்கையம்மன் உண்டியல், கோவில் மீது வைக்கப்பட்டிருந்த கலசம் மூன்றாவது முறையாக கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொள்ளையடித்த கலசத்தை கொள்ளையர்கள் அங்கேயே வீசி சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சாலை ஓரத்தில் உள்ள திருப்பதி கங்கை அம்மன் ஆலயத்தின் உண்டியல், கோவில் மீது வைக்கப்பட்டிருந்த கலசத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியாக ஆட்கள் வருவதைக் கண்ட கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு கலசத்தை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை முயற்சி குறித்து கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
இந்த கோவிலின் இது மூன்றாவது முறையாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.