ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

0
94
Madurai
Madurai

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே ஓடை ஆக்கிரமிப்பை அளவீடு செய்த பின்னும் ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஓடைப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.

இந்நிலையில் அளவீடு செய்து பல மாதங்கள் ஆகியும் இன்று வரை ஆக்கிரமிப்பை அகற்றி ஓடை பாதையை மீட்டுத்தர அதிகாரிகள் காலதாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியும், ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் நிலைய போலிசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.