சிவில் சர்வீசஸ் தேர்வு: 19 நாட்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியீடு! யு.பி.எஸ்.சி.!

0
73

அக். 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சிவில் சர்வீஸில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டில் 796 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 31ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால், கொரோனா பரவலின் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே அக். 4ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2569 மையங்களில் சுமார் 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினார்கள்.

இந்நிலையில், அக். 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம், கட் – ஆப் போன்ற விவரங்களை https://upsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என யு.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K