யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும்

0
378
upi payments charges in india
#image_title

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம்அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடானது பொதுமக்கள் மத்தியில் அதிகமானது.

இதை ஆதரிக்கும் விதமாக இந்தியாவில் இனி “Cashless Transaction” எனும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தான் ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசும் தெரிவித்திருந்தது. சமீபத்திய வெளியான மத்திய அரசின் புள்ளி விபரங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் கடந்த காலத்தை விட அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிரபலமாகி வரும் இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனையில்  யுபிஐ எனப்படும் பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரையில் இருக்கும் பெரிய வியாபார நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட  அனைத்து தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தயாராகினர். இதற்காக  QR Code அட்டைகளுடன் வியாபாரம் செய்யவும் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தான் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க  தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது.இந்த நடவடிக்கையானது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின்படி வாடிக்கையாளர்கள் தங்களது யுபிஐ கணக்கிலிருந்து வியாபாரிகளுக்கு ரூ.2000 க்கும் மேல் பணம் செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் தேசிய பரிவர்த்தனை கழகத்தின்  இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் படி எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%,  Mutual Fund, அரசு, காப்பீடு மற்றும் ரயில்வே துறைக்கு  1% கட்டணம் வசூலிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தனி நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும் போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனி நபர் பரிவர்த்தனைகளை செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

புதியதாக அறிவித்துள்ள இந்த புதிய கட்டண விதிமுறைகள் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும்  கூகுள் பே, போன்பே, பேடிஎம் , பாரத் பே போன்ற நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்கள் அல்லது ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் போன்றவற்றால் பரிவர்த்தனைகள் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படாது.