குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

0
136
#image_title

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் குப்பை கிடங்கு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரங்கள் மற்றும் வாகனங்களை சிறைபிடித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது.

அதன்படி திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மலைக்குன்று அடிவாரப் பகுதிகளை அழித்து குப்பை கிடங்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவனந்தல், புனல் காடு, கலர் கொட்டா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கே குப்பை கிடங்கை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலத்தை சமம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அங்கு நகராட்சிக்கு சொந்தமாக குப்பை கிடங்கு அமைக்கப்படுவதில்லை என்றும், கிராம ஊராட்சிகளின் சார்பில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு வருவதாக கூறி அதிகாரிகள் தற்போது குப்பை கிடங்கு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு வாகனங்களை சிறைபிடித்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக கிராம மக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
Savitha