கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதமானது 70 சதத்தை நெருங்குகிறது,அதேபோல இறப்பு விகிதமானது தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.
ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து இன்று 70 விழுக்காட்டை நெருங்கியுள்ளது.
நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது அதிகரித்திருப்பது, குறைவான தொற்றுள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15,83,489-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,746 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,39,929 மட்டுமே. இது, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28.21 விழுக்காடுதான். இவர்கள், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதால், கொவிட்-19 நோயாளிகளைவிட, 9.5 லட்சம் பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் விகிதமும் உலக சராசரியைவிட இந்தியாவில் குறைவாக இருக்கிறது. இன்று இந்த இறப்பு விகிதம் இரண்டு விழுக்காடாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.