வாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை கொடுக்குமா?

0
73

வாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை கொடுக்குமா?

கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாரோ இல்லையோ தன்னுடைய வாரிசு உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் பதவியே வேண்டாம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அப்போதே ஓரளவு மக்களின் கணிப்பு உறுதியாகியது.

எதிர்பார்த்த மாதிரியே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் ஆண்ட பாஜக அரசின் மீதுள்ள அதிருப்தியால் திமுக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை காரணமாக வைத்து உதயநிதி ஸ்டாலினை திமுகவின் இளைஞர் அணி செயலாளர் ஆக்கி விட்டார். இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க வழக்கம் போல ஸ்டாலின் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி போல உதயநிதி ஸ்டாலினையும் ஊர் ஊராக சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்குமாறு கூறியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவராக வரவுள்ள உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்றும் இதன் மூலம் தங்களுடைய காரியங்களை முடிந்த வரை சாதித்து கொள்ளலாம் என்றும் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகளும் தவியாய் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக இளைஞர் அணிச்செயலாளராக உதயநிதி தேர்வு செய்யப்பட்ட பிறகு அககட்சி நிர்வாகிகள் இடையே ஒரு குழப்பம் இருந்தது. உதயநிதியை சென்று சந்திக்கலாமா? வாழ்த்து கூறலாமா? இல்லை காத்திருக்க வேண்டுமா? என்பது தான் அது. இதனால் பலரும் தவித்துக் கொண்டிருந்த நிலையில் சிலர் தலைமை கழகத்தை தொடர்பு கொண்டு உதயநிதியை சந்திக்க வேண்டும், வாழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டனர் என்கிறார்கள். இது உண்மையா என்பது கேள்வியே ஆனால் திமுகவின் அடுத்த அதிகார மையமாக மாறி வரும் உதயநிதி ஸ்டாலினை சந்திப்பது தான் சாதகமாக இருக்கும் என பெரும்பாலான நிர்வாகிகள் நினைக்க துவங்கி விட்டனர்.

உதயநிதி ஸ்டாலினை சந்திக்க தினமும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஏற்கனவே ஸ்டாலின் திட்டமிட்டது போலவே வாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்கவும் உதயநிதி சந்திப்பிற்கான இந்த ஏற்பாடு உதவும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் என்கிற ரீதியில் நிர்வாகிகள் உதயநிதியை சந்திக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. துவக்கத்தில் உதயநிதி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ஸ்டாலின் தடை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலினே நேரில் அழைத்து தம்பியை பார்த்துவிடுங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பிறகே சென்னையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்கட்டமாக சென்னை நிர்வாகிகளை உதயநிதி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் முதல் வார்டு பிரதிநிதிவரை அனைவரும் நேற்று உதயநிதியை காண அழைத்து வரபட்டுள்ளனர்.

சால்வையுடன் வந்த நிர்வாகிகள் உதயநிதியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம் செய்திருந்தார். சுமார் 1 மணி நேரம் வரை இந்த நிர்வாகிகள் சந்திப்பு நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு முக்கிய நிர்வாகிகளை மட்டும் அழைத்து உதயநிதி ஸ்டாலின் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின் போது சென்னையின் தண்ணீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் குறித்தெல்லாம் உதயநிதி கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். இளைஞர் அணி நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் திமுகவின் வெவ்வேறு அணி நிர்வாகிகளும் உதயநிதியை சந்திக்க ஆர்வத்துடன் வருகின்றனர். இதில் சிலர் ஏற்கனவே கூறியது போல எதாவது ஒரு பரிந்துரை கடிதங்களுடன் உதயநிதியை சந்திப்பது தான் குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல்களில் திமுக தலைவர் மக்கள் பிரச்னைகளுக்காக நமக்கு நாமே மற்றும் கிராம சபை கூட்டம் என நடத்தியது போல தங்களுடைய உட்கட்சி பிரச்சனைகளை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக சென்று நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடு செய்துள்ள விளம்பர யுக்தி கை கொடுக்குமா? காத்திருந்து பார்க்கலாம்.

author avatar
Parthipan K