எங்கள் போராட்டம் வெல்லும் வரை ஸ்லீப்பர் செல்கள் பணிகள் தொடரும்! டிடிவி தினகரன் அதிரடி!

0
82

சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவின் தலைமையால் அதிரடியாக நீக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் டிடிவி தினகரன் அவர் செய்ததெல்லாம் தவறு என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் எங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பும் சமயத்தில், அவருடைய காரில் அதிமுகவின் கொடி இருந்தது. இது தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்கள் அதிமுக சார்பாக எழுந்திருக்கின்றன.

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், போன்றோர்கள் இதற்கு சட்டப்படி நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்ற சூழ்நிலையில், அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி நேற்றையதினம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றியபோது, சசிகலா எங்களுடைய கட்சியில் உறுப்பினரே கிடையாது. எல்லா நேரத்திலும் அனைத்து உறுப்பினர்களும் அவருடைய உறுப்பினர் அட்டையின் காலம் முடிவடைந்த பிறகு தங்களுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் .ஆனாலும் சசிகலா தன்னுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வில்லை ஆகவே அவர் அதிமுகவின் உறுப்பினரே கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல தவறு செய்த பின்பு கட்சியைவிட்டு விலக்கி வைக்கப் படுபவர்கள் மன்னிப்பு கேட்டால் கட்சியின் தலைமை மறுபடியும் அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பரிசீலனை செய்யும். அதேபோல டிடிவி தினகரன் அவர் செய்தது எல்லாம் தவறு என்று தெரிவித்து ஒரு கடிதம் எழுதி கொடுத்தால் எங்கள் கட்சியின் தலைமை அதனை பரிசீலனை செய்து அதன்பேரில் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உரையாற்றிய டிடிவி தினகரன் தற்போது சின்னம்மா உறுப்பினரே கிடையாது என்று பேசும் ஒரு சிலர்தான் ஒன்றுகூடி, பொதுக்குழுவை கூட்டி அவரை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள். பொதுச்செயலாளரை கட்சியை விட்டு நீக்க இயலாது. ஆகவே சசிகலா தற்போது வரை பொதுச் செயலாளராக நீடித்து வருகின்றார் என்று தெரிவித்தார்.

தற்போது எங்களின் சார்பாக நடைபெற்று வரும் சட்டப் போராட்டம் வெற்றி பெறும் வரை ஸ்லீப்பர் செல்கள் தங்களுடைய பணிகளை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.