இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!

0
40

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தில் நாளை பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் என எதுவும் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சென்னையில் நாளை 50 சதவீத இருக்கைகளுடன் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே ரயில்களில் பயணிக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31 ஆம் தேதி வரை மின்சார ரெயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்கிற கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்றும் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் போது இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் முக கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

author avatar
Parthipan K