தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!!

0
98

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 5 மாத காலமாக பொது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் மாநகரப் பேருந்துகள் இன்று இயக்கப்படும் நிலையில், சென்ட்ரல் பனிமணையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் 6,090 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. பேருந்து சேவை தொடங்கப்பட்ட முதல் நாளான இன்று பேருந்தில் பயணிக்க மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. வரும் காலங்களில் தேவைக்கேற்ப பேருந்து வசதிகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மாநகரப் பேருந்துகள் மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை செல்லும் என்றும் இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் புதிய பஸ் பாஸ் இன்று முதல் வழங்கப்படும் என்றும் பழைய பாஸ் செப் 15-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

author avatar
Parthipan K