நாளை காதலர் தினம்! கொண்டாடுவதற்கு பணத்திற்காக வாலிபர்கள் செய்த செயல்!

0
208
#image_title

நாளை காதலர் தினம்! கொண்டாடுவதற்கு பணத்திற்காக வாலிபர்கள் செய்த  செயல்!

நாளை காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாட இருப்பதால் அதை கொண்டாடுவதற்கு பணம் இல்லாத காரணத்தால் வாலிபர்கள் வினோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ரேணுகா (வயது 36). இவர் தனது வீட்டு வாசலில் முன்னால் பட்டி அமைத்து, 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வீட்டின் உள்ளே ரேணுகா வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்கவே வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அங்கு பட்டியில் உள்ள ஆடுகளில் ஒரு ஆட்டினை மட்டும் இரு வாலிபர்கள் கட்டி மோட்டார் சைக்கிளில் தூக்கிச்செல்ல முயன்றுள்ளனர். உடனே அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகா திருடன்! திருடன்! பிடியுங்கள்!  என்று சத்தம் போட்டு உள்ளார்.

இதனால் உடனடியாக ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த 2 வாலிபர்களையும் அடக்கிப் பிடித்து கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  அந்த இரண்டு பேரிடமும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஞானகுமார் மற்றும் பொன்னுரங்கம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த மணிராம் மகன் அரவிந்தகுமார் வயது 20, செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் மகன் மோகன் வயது 20 ஆகியோர் என்பது தெரியவந்தது.  நாளை(செவ்வாய்க்கிழமை) பிப்ரவரி 14  காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு கையில் போதிய பணம் இல்லாததால் ஆட்டை திருடி விற்று கிடைக்கும் பணத்தில் காதலர் தினத்தை கொண்டாட முடிவு செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து ஆடி திருடிய வாலிபர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. காலையிலேயே ஆடு திருட வந்த திருடர்களால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.