இன்று ஆரம்பமாகிறது 15வது மெகா தடுப்பூசி முகாம்! சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்!

0
85

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதற்க்கு பொதுமக்கள் பெரிதாக ஒத்துழைப்பு வழங்காததால் மத்திய, மாநில அரசுகள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். ஆனால் தற்சமயம் அனைத்து தரப்பு மக்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தொடங்கி விட்டார்கள் என்ற காரணத்தால், மத்திய மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் சிரமம் தெரியவில்லை.

இந்த நிலையில், தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கியது, தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அந்தந்த மாநில அரசுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன. அந்த விதத்தில் தமிழகத்திலும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்த சூழ்நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் துரிதப்படுத்தும் விதத்தில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு ஆரம்பித்து வைத்தது. இதன் மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது வரையில் 14 தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் 15ஆவது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற இருக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பு முகாமில் காலக்கெடு முடிவடைந்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அந்த விதத்தில் தற்சமயம் 75 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது.

சென்னையில் மட்டும் சுமார் 1600 பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது, சென்னையில் இதுவரையில் 87 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 63% நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும், செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.