இதனை உடனே அமல்படுத்துங்கள்! மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

0
80

டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண் சீனியாரிட்டி படி பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற இதற்கு முன்னால் வழங்கிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.

இருந்தாலும் இந்த உத்தரவை தற்போது வரையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை டிஎன்பிஎஸ்சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர், உள்ளிட்டோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை 12 வாரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் இது தொடர்பாக ஜனவரி மாதத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது. அதனடிப்படையில் நேற்றைய தினம் நீதிபதிகள் நாகேஸ்வரராவ் மற்றும் டி.ஆர்.கவாய் உள்ளிட்டோர் முன்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்த சமயத்தில் தமிழக அரசின் சார்பாக அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்குவது குறித்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது என்று எங்களுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. நோய்தொற்று, மழை வெள்ள பாதிப்பு, என்று தமிழ்நாட்டில் அடுத்தடுத்த பிரச்சனைகள் சுழற்சியாக வந்து கொண்டிருந்தது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், பணி நியமன தேர்வு குறித்த வேலைகளை எவ்வாறு எங்களால் செய்ய இயலும்? இந்த விவகாரத்தில் காலதாமதம் ஆனதற்கு எங்களுடைய மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறோம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அரசு அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை அதற்கான தொடக்கப் பணிகளைக் கூட செய்யாமல் இருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறால் பல அரசு ஊழியர்கள் பாதித்து இருக்கிறார்கள் இதன் காரணமாக, இவர்களுக்கு ஒரு மாதமாவது சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, அரசு அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தால் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து விதமான வேலைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் அரசு அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

அதோடு டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப்பணிகளில் மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற இதற்கு முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், உத்தரவிட்டு இருக்கிறார்கள். இந்த உத்தரவு நீதிமன்றத்தை நாடிய மனுதாரர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.