ஜூன் 1 முதல் தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

0
66

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் மாநிலத்துக்கு செல்லும் வகையில் ஷார்மிக் ரயில்கள் இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 20 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து 100 சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்திலிருப்பதால் ரயில் போக்குவரத்து தற்போதைக்கு வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கோட்டு கொண்டதால் தமிழகத்திற்கான ரயில்கள் அப்போது அறிவிக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமில்லாத தமிழக நகரத்தினிடையே ரயில் போக்குவரத்தை துவங்க தமிழகத்தின் சார்பில் தென்னக ரயில்வேவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது இதற்கு அனுமதியளித்துள்ள தென்னக ரயில்வே ஜூன் 1ம் தேதி முதல் கீழ்கண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரயில்கள் விவரம் :

  • கோயம்புத்தூர் – மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில்
  • மதுரை- விழுப்புரம் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்
  • திருச்சி – நாகர்கோவில் அதிவிரைவு ரயில்
  • கோயம்புத்தூர் – காட்பாடி இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்

கோயம்புத்தூர்-மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களும் இயக்கப்படும் என்றும் மற்ற மூன்று ரயில்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K