ஊழலைப் பற்றி விவாதிப்பதற்கு துண்டு சீட்டு இல்லாமல் கலந்து கொள்ள தயாரா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட முதல்வர்!

0
66

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த இடத்திலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்து இருக்கிறார்.

சட்டசபை தேர்தலை ஒட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் செய்து வருகின்றார். அந்த முறையிலே நேற்றைய தினம் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். திமுக சார்பாக நடத்தப்படும் கிராமசபை கூட்டங்கள் மூலமாக மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து பிரிவார் என்று தெரிவித்தார் ஸ்டாலின். அதிமுக இரண்டாக உடையும் சொன்னதற்கு பிரச்சாரத்தில் பதில் அளித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக உடையும் என்று தெரிவித்தார் இப்போது என்ன நடக்கின்றது? அழகிரி கட்சி ஆரம்பிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். எக்காலத்திலும் அதிமுக உடையாது திமுக உடையாமல் இருப்பதற்கு வேண்டுமானால் வழி செய்து கொள்ளுங்கள் என்று ஸ்டாலினுக்கு அவர் அறிவுரை கூறியிருக்கிறார்.

மதச் சண்டைகள், ஜாதி சண்டைகள்,இல்லாமல் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்று தெரிவித்த முதலமைச்சர், பொய்களை வாரி வீசி குறுக்கு வழியிலே ஆட்சியை பிடிப்பதையே ஸ்டாலின் நோக்கமாக கொண்டு இருக்கிறார். என்று குற்றம்சாட்டி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் ஸ்டாலின் ஊழல் புகார்கள் கொடுத்து இருப்பதற்கு ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர்,ஊழல் எங்கே நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதத்திற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஸ்டாலின் துண்டு சீட்டு எதுவும் இன்றி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என சவால் விடுத்து இருக்கிறார்.

இந்திய நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால், அது திமுக தலைமையிலான ஆட்சி தான் என்று விமர்சித்தார் முதலமைச்சர். அரசி ஊழல், வீராணம் ஊழல் என்று திமுக தொடர் ஊழலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் உலகத்தையே உலுக்கி இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஊழல்வாதிகள் தான் இப்பொழுது அதிமுக அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.