இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!

0
59

இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.

துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ளதால் அன்று முதல் பேருந்துகளை இயக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்துக் கழகங்களுக்குத் தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் “தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பஸ்களை இயங்க தயாராக இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும்.

பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுனர், நடத்துனர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பயணிகள் இருக்கையில் அமர “மார்க்” செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.

அதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல் கூகுல்பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.

பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்ட மிடும்போது இது போன்ற நடவடிக்கை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களும் இதை கவனமுடன் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பில்லாத இடங்களில் 50% இருக்கை வசதியுடன் பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா கட்டுக்குள் வரும் வரை குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகள் இயக்கப்படாது என்று கூறப்படுகிறது.

author avatar
Parthipan K