என்னுடைய மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்! ஹேமந்த் வழங்கிய பகீர் புகார்!

0
65

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக விஜய் டிவியில் பிரபலமான வி.ஜே சித்ரா கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் நசரத்பேட்டையிலிருக்கின்ற பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய இந்த திடீர் மரணம் அவருடைய ரசிகர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் உள்ளிட்டவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சித்ராவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக சித்ராவின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது சித்ராவிற்கும் ஹேமந்த் என்பவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றிருந்ததால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சித்ராவின் மரணத்திற்கு அவருடைய கணவரான ஹேமந்த் தான் காரணம் என்று புகார் வழங்கப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு அதன் பிறகு விசாரணை செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், கடந்த 25ஆம் தேதி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஹேமந்த் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அந்த புகாரில் நானும், என்னுடைய மனைவி சித்ராவும். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். அதோடு என்னுடைய மனைவி சித்ரா இறந்தவுடன் நானும் இறந்து விடலாம் என்ற நோக்கத்திலிருந்தேன்.

ஆனால் என்னுடைய மனைவியை கொலை செய்தது நான் தான் என்று என் மீது பழி சுமத்துகிறார்கள், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்துக் காட்ட நான் உயிருடன் இருந்து வருகிறேன் என தெரிவித்தார்.

சித்ராவின் மரணத்திற்கு முன்னாள் அமைச்சரான ஒரு அரசியல்வாதி, போதை கும்பல் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் உள்ளிட்டோர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பண பலம் வாய்ந்தவர்கள்.

அவர்களை நான் எதுவும் செய்ய முடியாது. என்னுடைய மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலம் மிக்க மாபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, மரணத்திற்கு காரணமான 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும், அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுக்கிறார்கள்.

தற்சமயம் நான் உயிருக்கு பயந்து என்னுடைய வழக்கறிஞர் வீட்டில் தங்கியிருக்கிறேன் என்றும், கூறியிருக்கிறார்.

அதோடு என்னுடைய மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் பெயரை வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என அந்த அரசியல் தலைவர் மிரட்டி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

இப்படியே இருதரப்பினரும் என்னை மிரட்டி வருவதால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை தான் உயிர் வாழ விரும்புவதாகவும், அதோடு மட்டுமல்லாமல் ஒருவேளை நான் அதற்கு முன்னரே இறந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டால் என் மனைவி என்னிடம் தெரிவித்த தகவலை வெளியிடுவேன் என்றும், தன்னுடைய மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்களால் தனக்கும் ஆபத்துள்ளதால் தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவர் தற்சமயம் கோரிக்கை மனு வழங்கியிருக்கிறார்.