திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி.?-அமைச்சர் ஆலோசனை.!!

0
112

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்படும் என்றும், கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்களுக்கான மின் கட்டணத்தை அறநிலையத்துறையே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபத் திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.