கடலூர் மாவட்டத்தில் உள்ள 35,228 மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

0
131
#image_title

கடலூர் மாவட்டத்தில் 35,228 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சிதம்பரம்,ஏப்.14: கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 35 ஆயிரத்து 228 பேர் உள்ளனர். அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள ஜிவி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஆர்.என்.சுசிலா செவித்திறன் குறையுடையோர். பள்ளி, மாற்றுத் திறனாளி தொழிற்பயிற்சி மையம், மருத்துவர் கே.ரங்கசாமி தசைப்பயிற்சி மையம் 33வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.

விழாவில் அவர் பேசியது: மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி நடத்துபவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது கருவிலேயே அறிந்து குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஆலோசித்து செயல்படுத்த இருந்தோம்.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. செவித்திறன் குறைந்த குழந்தைகளுக்கு அதனை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து, செவிதிறனை ஏற்படுத்தி அதன் பிறகு பேச்சு தெரபி பயிற்சிஅளிக்கப்பட்டு செயல்படுத்தியுள்ளோம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதன் முறையாக ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம்.தற்போது அந்த குழந்தை 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 35 ஆயிரத்து 228 பேர் உள்ளனர்.

அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பள்ளிக்கு அரசு சார்பில் 4 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஆண்டிற்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது.

பயிலும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த பள்ளிக்கு பல்வேறு உதவிகளை வழங்க தயாராக இருக்கிறோம். அரசியல் கட்சிகள் போராட்டம் என்று மட்டுமல்லாமல், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி, நகராட்சி பிரதிநிதிகள் இதுபோன்ற பள்ளிக்கு உதவி அளிக்க வேண்டும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

முன்னதாக பள்ளி தசை பயிற்சியாளர் மாதவன் வரவேற்றார். விழாவில் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் கே.ஆர்.முத்துக்குமரன் வாழ்த்துரையாற்றினார், பள்ளி அறங்காவலர்கள் சபாநாயகம், நடனசபாபதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் வேளாண்துறை தலைவர் பேராசிரியர் கே.கணபதி, டாக்டர் ரமேஷ் மற்றும் சிதம்பரம் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

– சிதம்பரம் ஜிவி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, செவித்திறன் குறைவுடையோர் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

author avatar
Savitha