மூதாட்டிக்கு உதவிய இளம்பெண்! நெகிழ்ந்துபோன முதலமைச்சர்!

0
46

சேலம் மாவட்டம் சேலநாயக்கனூர் பட்டியில் மூதாட்டி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இருக்கிறார். அவரை அவருடைய மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால் மூச்சுத்திணறல் காரணமாக அவர் வழியிலேயே மயங்கி விழுந்தார்.

நோய் தொற்று அச்சம் காரணமாக, அவருக்கு உதவி புரிய யாருமே முன்வராத நிலையில், சேலம் காட்டூர் பகுதியைச் சார்ந்த இளையராணி என்ற பெண் அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி புரிந்தார். ஆனாலும் அவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு அவரை பிடித்துக் கொண்டு சென்ற சமயத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்.

 

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்து போய் இருக்கிறார். இந்த நிலையில், இன்று சேலம் மாவட்டத்திற்கு நோய்த்தொற்று பரவல் ஆய்வுக்காக சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மூதாட்டிக்கு உதவி புரிந்த அந்த பெண்ணை சேலம் விமான நிலையத்திற்கு வரவழைத்து அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் வாகனத்திலிருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு நோய்த்தொற்று அச்சம் காரணமாக, யாருமே முன்வராத நிலையில், இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இன்று சேலம் சென்றபோது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன் இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது என பதிவிட்டிருக்கிறார்.