இதற்கு அவர்கள் மட்டும்தான் காரணம் அண்ணாமலை குற்றச்சாட்டு!

0
49

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நவ யோகம் மற்றும் ஞானோதயம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஜெய் குரு ஜீவசமாதி இருக்கிறது. இங்கு நேற்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வந்து ஜெய் குருஜியின் சமாதி மற்றும் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம், பிரதமரின் 80 சதவீத திட்டங்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலமாக தான் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, உள்ளாட்சியில் ஊழல் இல்லாத நல்ல பிரதிநிதிகளை அமைத்து பொது மக்களுக்கு நல்லதை செய்ய நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக பாடநூல் போன்றவற்றில் பல மாற்றங்களை கொண்டுவர வேண்டும், குறிப்பாக பாரதியின் பாடல்கள், கவிதை, கருத்துக்கள் என்று பாரதியின் பங்களிப்பு அதிகமாக பாடநூலில் இடம் பெற வேண்டும். புதிய இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று முன்பே பல்வேறு தகவல்களை அவர் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.

அதேபோல ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கொண்ட பெருமை வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அவருடைய படை தளபதி குயிலி உள்ளிட்டோரையே சாரும். அவர்களுடைய வரலாற்றையும் பாடநூலில் கொண்டுவர வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை பாஜக சார்பாக வலியுறுத்தி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

சென்ற 3 வருடங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக வாகனம் இடம்பெற்றிருந்தது அப்படியிருக்கும்போது இந்த வருடம் இடம்பெறவில்லை என்றால் அதற்கு முழுமையான பொறுப்பு தமிழக அரசுதான். அப்போது பணிபுரிந்த அதே அரசு அதிகாரிகள் தான் தற்போதும் பணியாற்றி வருகிறார்கள். தற்சமயம் ஏன் அவர்கள் சரியாக வேலை பார்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

டெல்லி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு இல்லாதது வருத்தத்திற்குரியது இதனை அடுத்த வருடம் சரி செய்ய வேண்டும். அதற்காக எல்லோரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர மத்திய அரசின் மீது குற்றம் சொல்லி அதன் மூலமாக அரசியல் லாபத்தை தேடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக அரசை பொறுத்தவரையில் மாதம் ஒரு கோட்டா வைத்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில் இந்த மாத கோட்டாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். நீதிமன்றம் இருக்கிறது இங்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார்களா என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நிரூபிக்க வேண்டும். அப்படி தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கவேண்டும் இதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.