திருமணமானவர்களுக்கு வருடாந்திர ஓய்வூதிய பென்ஷன் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

0
83

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சில வருடங்களுக்கு முன்னர் சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணியாற்றும் நபர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் விதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகும்.

மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை சார்பாக இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் திருமணமான தம்பதியர் ஒன்றிணையும் பட்சத்தில் ஓய்வு காலத்தில் அவர்கள் வருடம் தோறும் 72,000 ஓய்வூதியமாக பெற முடியும் என சொல்லப்படுகிறது.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?

வீட்டு வேலை செய்யக்கூடிய பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள் சத்துணவுத் திட்ட பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், செங்கல் சூளை பணியாளர்கள், ஷூ தைப்பவர்கள், குப்பை பொறுக்கும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், ரிக்ஷ வண்டியின் ஓட்டுனர்கள்.

நிலமற்ற தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள், பீடி தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், லேத் பணியாளர்கள் மற்றும் மாதம் தோறும் 15,000 அல்லது அதற்கு குறைவான ஊதியம் வாங்குபவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். 18 வயது முதல் 40 வயது வரை நபர்கள் இதில் இணைந்து கொள்ளலாம்.

தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைபவர்கள் மத்திய அரசின் மற்றொரு திட்டமான தேசிய ஓய்வூதிய திட்ட உறுப்பினர்கள் பணியாளர்களுக்கான அரசு காப்பீட்டுக் கழகப் பணியாளர்களாகவோ அல்லது இ.பி. எஃப்.ஓ திட்டப்பணியாளர்களாகவோ இருக்கக் கூடாது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

திட்டத்தில் இணையும் ஒவ்வொரு நபரும் 60 வயது பூர்த்தியடைந்த பின்னர் குறைந்தபட்சம் மாதந்தோறும் 3000 ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதியம் பெற வேண்டிய சமயத்தில் பயனாளி உயிரிழந்து விட்டால் அவருடைய வாழ்க்கை துணைக்கு 50% ஓய்வூதிய தொகை குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும்.

திட்டத்தில் இணைவது எப்படி?

ஒரு கைபேசியை வாங்கி கொண்டு வங்கி சேமிப்பு கணக்கு, ஆதார் எண், உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அருகிலிருக்கின்ற ஈ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பம் செய்யலாம்.

தம்பதியர் வருடம் தோறும் 72,000 பெறுவது எப்படி?

இந்தத் திட்டத்தில் இணையும்போது உங்களுக்கு 30 வயது என வைத்துக் கொண்டால் நீங்கள் மாதந்தோறும் 100 ரூபாய் தவணைத்தொகை செலுத்துவீர்கள்.

உங்களுடைய வாழ்க்கை துணைக்கு 100 ரூபாய் சேர்த்து ஒட்டுமொத்தமாக மாதந்தோறும் 200 ரூபாய் செலுத்தி வருவீர்கள், உங்களுக்கு 60 வயது பூர்த்தியடையும் போது ஒரு நபருக்கு வருடம் தோறும் 36,000 விதம் ஒட்டுமொத்தமாக 72,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.