பாலியல் வன்முறை தொடர்பாக புகார் கொடுக்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி! காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்!

0
117

தற்போதுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பலவிதமான சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அந்த சட்டங்களையும் மீறி இதுபோன்ற தவறுகள் பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது. இதனை மத்திய, மாநில, அரசுகள் கருத்திற்கொண்டு விரைவில் நல்லதொரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 4 பேரால் போபாலுக்கு கொண்டுசெல்லப்பட்டு 3 நாட்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக புகார் வழங்குவதற்காக அவருடைய தாய் சிறுமியுடன் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சிறுமியை தனியே விசாரிக்க அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரி அந்த சிறுமியை கற்பழித்திருக்கிறார்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவருக்கு தெரியவர அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் வழங்கியிருக்கிறார். அதன் பிறகுதான் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை தேடிவந்தனர் அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு காவல் நிலையத்தில் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரியும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அந்த காவல்துறை அதிகாரியை தேடிவருகிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

இந்த சூழ்நிலையில், சிறுமி குழு பலாத்காரத்தில் சிதைக்கப்பட்டதாக புகார் கொடுக்க வந்த இடத்தில் காவல்துறை அதிகாரியால் கற்பழிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.