நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ

0
180
#image_title

நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ

தமிழகத்தில் கடந்த சில வாரமாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, அவர்களுடன் கலந்துரையாடி அரசு என்றும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர், நேற்று இரவு அவர்கள் தங்கியிருந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடினர். அச்சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.

இதே போல அப்பகுதியில் உள்ள மற்றொரு வெல்ல ஆலையிலும் இதே போன்ற தீவைப்பு சம்பவம் நடைபெற்றது, இதில் உழவு பணிக்கு பயன்படுத்த வைத்திருந்த மூன்று டிராக்டர்கள் தீயில் எரிந்து கருகின, மேலும் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது வீட்டில் தீவைப்பு சம்பவத்தில் வீட்டில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் 30,000 பணம் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின.

இந்த தீவைப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல்துறையினர் அப்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.