விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கடைசி பயண காட்சி வீடியோ!

0
85

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மதுலிகா உள்பட 14 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்து நடைபெற்ற ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு குன்னூர் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் உள்ள ரன்னிமேடு தொடர்வண்டி நிலைய தண்டவாளம் பகுதியில் சில சுற்றுலாப் பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அந்த வழியாக வானில் பறந்து வந்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

20 விநாடிகள் ஓடுகின்றன அந்த வீடியோவில் ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றது, பின்னர் ஒரு சில விநாடிகளில் பனி மூட்டத்தில் அது மறைந்தது அப்போது திடீரென்று பலத்த சப்தம் கேட்கிறது. அதனைக் கேட்டவுடன் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் ஹெகாப்டர் விழுந்து விட்டதா? என்று தெரிவிக்கிறார், தொடர்ந்து அந்த வீடியோ முடிவடைகிறது.

20 வினாடிகள் வீடியோ ஓடினாலும் அது ஹெலிகாப்டர் வருவதும், பனி மூட்டத்தில் மறைந்து செல்லும் காட்சியும், 6 வினாடிகளில் முடிந்து விடுகிறது. அந்த ஹெலிகாப்டர் தான் விபத்துக்கு உள்ளானது என்பது தெரியவந்திருக்கிறது. அந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் கடைசி பயண வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

60 டிகிரி வரையில் சாய்வாக இருக்கின்ற அந்த மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது. அதோடு ஹெலிகாப்டர் மோதிய வேகத்தில் 13 மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன, இதை தவிர ஒரு சிமெண்ட் மின்கம்பம் உடைந்து இருப்பதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

விபத்து நடந்த இடத்திலிருந்து ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு ஹெலிகாப்டரில் 5 நிமிடங்களுக்குள் சென்றுவிட இயலும். ஆகவே தரையிறங்க வேண்டிய சமயத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.