குழந்தை வரம் வேண்டி 2 பெண்களை பலிகொடுத்த தந்தை.!!

0
71

குழந்தை வரம் வேண்டி ஒரே வாரத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பந்து மதுரியா-மம்தா தம்பதியினருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், குழந்தை வேண்டி பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர்களது உறவினரான நீரஜ் என்பவர் பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சாமியார் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 21-ம் தேதி குவாலியரில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்திய போது அங்கு இருந்தது பாலியல் தொழிலாளி என்பது தெரிய வந்துள்ளது.

அந்தப் பெண்ணை நீரஜ் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு அந்த சடலத்தை சடங்கு செய்வதற்காக சாமியாரிடம் கொண்டு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பயந்து போன நீரஜ் சடலத்தை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதேபோல், மற்றொரு பாலியல் தொழிலாளியையும் நரபலிக்காக கொலை செய்துள்ளார். ஒரே வாரத்தில் இரு பெண்களை நீரஜ் கொலை செய்ததை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மம்தா அவரது கணவர் மற்றும் மம்தாவின் சகோதரி மீரா, நண்பர் நீரஜ், சாமியார் யாதவ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரபலிக்காக இரு பெண்களை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.