நிலத்தை திருப்பி கேட்ட தந்தை!  மகன் செய்த படுபயங்கர காரியம்!

0
161

நிலத்தை திருப்பி கேட்ட தந்தை!  மகன் செய்த படுபயங்கர காரியம்! 

ஸ்ரீபெரும்புதூர் அருகில் சொத்து தகராறு ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையை மகன் கொலை செய்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 75). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் ராமச்சந்திரன் வயது 40 சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். எத்திராஜ் தனது மூத்த மகன் கண்ணனுடன் வசித்து வருகிறார்.

எத்திராஜின் மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகி அதே பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். எத்திராஜ் தனது விவசாய நிலத்தை மூன்று மகன்களுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இதில் ராமச்சந்திரன் தனக்கு குறைவாக சொத்துக் கொடுத்ததாக கூறி எத்திராஜ் உடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினமும் தந்தைக்கு மகனுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவரவர் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர். மறுநாள் காலை எத்திராஜ் தேவரியம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து சங்கராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியை ஓட்டி வந்த ராமச்சந்திரன் தனது தந்தை என்று கூட பாராமல் அவர் மீது லாரியை ஏற்றினார். இதில் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். ராமச்சந்திரன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து லாரியில் தப்பி சென்றார்.

இது குறித்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ஒரகடம் போலீசார் எத்திராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக எத்திராஜின் மகன் ராமச்சந்திரனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் கஷ்டப்படும் ராமச்சந்திரனின் மூத்த அண்ணன் கண்ணனுக்கு கொடுப்பதற்காக எத்திராஜ் கொடுத்த நிலத்தில் 5 சென்ட்  நிலத்தை திருப்பி தருமாறு ராமச்சந்திரனிடன் கேட்டுள்ளார். இதனால் எத்திராஜ்க்கும் ராமச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராமச்சந்திரன் ஆத்திரமடைந்து எத்திராஜை லாரி ஏற்றி கொன்றது தெரியவந்தது. போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக வேண்டி பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.