ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்!

0
120

ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மெதிப்பாளையம் கிராமம் அருகே முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராஜேஷ் மற்றும் அகிலா. இவர்களது மகன் மனோஜ் குமார் வயது 14. தலையாரி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

இதற்கிடையே மனோஜ் குமார் பள்ளிக்கு செல்லாமல் இடையில் கண்டபடி ஊர் சுற்றி வந்துள்ளான். இதனால் அவரது தாய் அகிலா சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி சேர்த்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கழிவறைக்கு சென்ற மனோஜ் குமார் மயங்கி விழுந்துள்ளார் அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன் போதை மறுவாழ்வு மையத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கழிவறையில் வைத்து சிறுவனை கட்டையால் அடித்ததில் வாந்தி ஏற்பட்டு மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளான் என்ற தகவல் அம்பலமானது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட 14 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.