நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்!

0
184
the-best-life-ive-ever-lived-was-as-a-painter-actor-sivakumar
the-best-life-ive-ever-lived-was-as-a-painter-actor-sivakumar

நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லூரி 65-வது ஆண்டு விழா மற்றும் கற்சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம், சுதை சிற்பம், ஓவியம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியின் முன்னாள் ஓவியபிரிவு மாணவரும், நடிகருமான சிவக்குமார் கலந்து கொண்டு, சிற்பக்கலை போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி, நடிகர் ஆவதற்கு முன்பு 7 ஆண்டு ஓவிய கலைஞனாக வாழ்ந்த வாழ்கையின் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது நடிகர் சிவகுமார் பேசியதாவது:-

“ஏழு ஆண்டுகள் நான் வரைந்த ஓவியங்களை இனி வரைய முடியாது. நான் வாழ்ந்த வாழ்க்கையில், மிகச்சிறந்த வாழ்க்கை எதுவென்றால், அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான். (நடிகர்) சூரியா, கார்த்தியும் மதிய சாப்பிட்டிற்கு ஸ்டார் ஓட்டலுக்கு சென்றார்கள் என்றால், சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு வேலை சாப்பாட்டிற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள்.

வெட்கமாக உள்ளது. நான் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை ரோடு, ரோடாகவும், தெருக்களிலும் ஸ்பாட் பெயிண்டிங் பண்ணியதற்கு அந்த 7 ஆண்டுகளில் ரூ.7450/- ஊதியமாக பெற்றேன்.

இதிலிருந்து நான் என்ன சொல்கிறேன் என்றால் எவன் ஒருவன் தேவை குறைப்பவனோ.அவன்தான் பெரிய செல்வந்தர் ஆவான். புதுப்பேட்டையில் வெறும் 15 ரூபாயில் 5½ அடிக்கு 6 அடி அளவு உள்ள ஒரு சிறிய ரூமில் தங்கி 7 ஆண்டு ஓவியனாக வறுமையின் கோரப்பிடியில் பணியாற்றி வந்துள்ளேன்” என்றார்.

நிகழ்ச்சியின் முடியில் நடிகர் சிவகுமார் தான் 7 ஆண்டுகள் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு புத்தகத்தினை சிற்ப கல்லூரி பேராசியர்களுக்கு நினைவு பரிசாக வழங்கினார். பென்சில் ஓவியத்தில் தன் படத்தை வரைந்து தனக்கு அதனை நினைவு பரிசாக வழங்கிய மாணவர்களை அழைத்து நடிகர் சிவக்குமார் தன்னுடன் புகைப்படம் எடுத்து அவர்களை பாராட்டினார்.

இவ்விழாவில் பிரபல ஓவியர்கள் டிராஸ்கி மருது, மணியன் செல்வன், மல்லை தமிழ்ச்சங்க தலைவர் மல்லை சத்யா உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.