கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

0
80

கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணை மதம் சார்ந்த உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை என்பது ஒரு மதத்திற்கான வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மத வழிப்பாட்டு தளங்களுக்கு கிடையாதா?
இதன் மூலம் கோவில் நிலங்களை விற்க இந்து அறநிலையத்துறையை தமிழக அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனளிக்கும்? என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வேதனை தெரிவித்தனர்.

மீண்டும் இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

author avatar
Parthipan K