கோவில் புறம்போக்கு இடங்களில் பட்டா! தமிழக அரசை கதறவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

0
73

கோவில் புறம்போக்கு இடங்களில் பட்டா! தமிழக அரசை கதறவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

புறம்போக்கு மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரங்கள் இல்லாமல் பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு, புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து கொண்டு இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு இது உதவியாக இருப்பதாகவும் இந்த அரசாணை என , ராதா கிருஷ்ணன் என்பவர் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, எதிர்ப்பு இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணையானது, மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி கொண்ட அமர்வுக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை என்பது ஒரு மதத்திற்கான வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மத வழிப்பாட்டு தளங்களுக்கு கிடையாதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதன் மூலம் கோவில் நிலங்களை விற்க அறநிலைய துறையை தமிழக அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனளிக்கும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள் இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அரசாணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதிக்குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

author avatar
Parthipan K