மாணவிகளுக்கு மாதவிடாயா என சோதனை: உள்ளாடைகளை களைய சொன்னதால் போராட்டம்!

0
79

மாணவிகளுக்கு மாதவிடாயா என சோதனை: உள்ளாடைகளை களைய சொன்னதால் போராட்டம்!

குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையம் ஒன்றில் மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று மாதவிடாயா என சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் எனும் பகுதியில் ’ஸ்ரீ சகஜானந்தா பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம்’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மையம் ஒரு கோவில் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதனால் இன்னமும் 19 ஆம் நூற்றாண்டுக்கான பழமையானப் பழக்கங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு வருகின்றனர்.

அவற்றில் முக்கியமானதும் மோசமானதும் மாதவிடாய் நாட்களில் அங்கு பயிலும் மாணவிகள் சக மாணவியரை தொட்டு பேசக்கூடாது மற்றும் எல்லோருடனும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்ணக் கூடாது. ஆனால் இவற்றை சில மாணவிகள் கடைபிடிக்காமல் வழக்கம் போல எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட்டு உள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்து கோபமான ஆசிரியைகள் வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த மாணவிகள் யாருக்கு எல்லாம் மாதவிடாய் எனக் கேட்க இருவர் எழுந்து கை தூக்கியுள்ளனர். ஆனால் அத்தோடு நில்லாமல் அனைவரையும் தனித்தனியாக கழிவறைக்கு அழைத்துச் சென்று மாதவிடாய் இருக்கிறதா என சோதித்துள்ளனர். அதற்காக அவர்கள் உள்ளாடைகளைக் கழற்ற சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த நிறுவனத்துக்கு எதிரில் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம்  ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து காவல்துறை தாமாக முன் வந்து விசாரணை செய்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாணவியும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

author avatar
Parthipan K