தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

0
57

தமிழகத்தில் இன்று நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் அறிவித்திருந்த சூழ்நிலையில், பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது குளிர்ச்சி நிலவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்ததாக சொல்லப்படுகிறது. மகாராஜபுரம், கிருஷ்ணன் கோயில், மணிகட்டி போன்ற பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததாக செல்லப்படுகிறது. இதன் காரணமாக. வெப்பம் சற்றே குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேபோன்று தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய வடுகப்பட்டி, காமாட்சிபுரம், கள்ளிப்பட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 8 நாட்களுக்கு பிறகு மிதமான சாரல் மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கழுகுமலை, போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த சூழ்நிலையில், பிற்பகலுக்கு பிறகு சாரல் மழை பெய்தது.

காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக, கயத்தாறு, தேவர்குளம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தார்கள்.