ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

0
81

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 18ஆம் தேதி நேற்றைய தினம் டெல்லிக்குச் சென்றார் சென்னையில் இருந்து விமானம் மூலமாக டெல்லி போனவருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

அங்கே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, போன்ற முக்கிய தலைவர்களை முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல தமிழக அரசின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வழங்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல அதிமுக ,மற்றும் பாஜக, கூட்டணி குறித்து ஒரு சில முக்கிய விஷயங்களையும் அமித்ஷா உடனும் பிரதமர் நரேந்திர மோடி உடனும் பேச விருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதுபோல தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும், மற்றும் சென்ற இரண்டு மூன்று மாதங்களாக தமிழகத்தில் பெய்த மழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்பு போன்றவற்றைப் பற்றியும் பேச இருப்பதாக தெரிகிறது.

தமிழ் நாட்டிற்கு தேவையான நிதியையும் வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைப்பார் என்று பேசப்பட்டு வருகிறது. இதில் மிக முக்கிய அம்சமாக விவசாயிகளுடைய கடன் தள்ளுபடி குறித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.

விவசாயிகளுடைய கடன்களை தள்ளுபடி செய்து அதன் மூலம் அவர்களுடைய வாக்குகளை பெறுவதற்கு முதல்வர் முயல்வதாக சொல்கிறார்கள். இதே வாக்குறுதியை சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்வைத்து தான் திமுக களம் இறங்கியது. அந்த தேர்வில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதை மனதில் வைத்தே இப்பொழுது எதிர்வரும் தேர்தலுக்காக மத்திய அரசிடம் முதல்வரும் இதே கோரிக்கையை முன்வைத்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

சென்ற 13ஆம் தேதியன்று பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 2006 ஆம் வருடம் திமுக ஆட்சி அமைந்தவுடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் முதல் கையெழுத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் ரத்து செய்வதற்காக தான் போடப்பட்டது என்று பேசியிருந்தார்.

இதனை மனதில் வைத்துதான் டெல்லி சென்றிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய கடன் தள்ளுபடி என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து பேச இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஸ்டாலின் சென்ற 13ஆம் தேதி மக்களிடையே நிகழ்த்திய உரையில் ஸ்டாலினின் விவசாயக் கடன் ரத்து என்ற பேச்சுக்கு பலத்த வரவேற்பு இருந்த காரணத்தால், நடப்பு ஆட்சி முடிவதற்குள் இந்த விவசாய கடனுக்கு ஒரு தீர்வு காணப்பட்டால், அது நிச்சயமாக எதிர்வரும் தேர்தலில் அதிமுகவிற்கு ஒரு பெரிய பலனை அளிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு முதலமைச்சர் தனக்கு கிடைத்திருக்கின்ற விவசாயி, மற்றும் காவேரி காப்பாளன் என்ற அடைமொழியையும் தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்வதாகவும் சொல்கிறார்கள்.