வெளிநாட்டு பயணம் வெற்றியா? தமிழகம் திரும்பிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

0
171
Tamil Nadu CM Edappadi Palanisamy Return to Chennai-Latest Tamil News Today News4 Tamil
Tamil Nadu CM Edappadi Palanisamy Return to Chennai-Latest Tamil News Today News4 Tamil

வெளிநாட்டு பயணம் வெற்றியா? தமிழகம் திரும்பிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்திற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது 14 நாள் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியுள்ளார்.

தமிழ் நாட்டிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கொண்டுவர அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். கடந்த மாதம் 28 ம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் முதலில் இங்கிலாந்துக்கும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார்.

அங்கு, தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்த முதல்-அமைச்சர், அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த வெளிநாட்டு பயணத்தில் தமிழக முதல்வருடன்,  அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர்கள் உடன் சென்றனர். இந்த பயணத்தின் போது இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அரங்கில் தமிழக முதல்வர் பேசும் போது, ‘இந்தியாவிலேயே முதலீடு செய்ய ஏற்ற மாநிலம் தமிழகம் தான்’ என்று கூறினார். இதையடுத்து புகழ் பெற்ற மருத்துவமனையான  கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்டதோடு, அது தொடர்பான தொழில்நுட்பங்களையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு குறித்து இங்கிலாந்து நிறுவனத்துடன் ஆலோசனையும் மேற்கொண்டார். 

அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் அடுத்து துபாய் சென்றனர்.

துபாயில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனையடுத்து தமிழக முதல்வர் தனது 14 நாள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “அயல் நாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. இது போன்ற அயல்நாட்டு அரசு முறை பயணம் தொடரும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலரும் ஆர்வத்தில் உள்ளனர்.

மேலும் சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம். கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளன. துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனையடுத்து தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும். உலகமெங்கும் வாழும்  தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். இந்த அரசுமுறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K