ஆற்காடு வீராசாமி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து! வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை!

0
60

சென்ற புதன்கிழமையன்று நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆற்காடு வீராசாமி தெரிவித்ததாக ஒரு தகவலை தெரிவிப்பதற்கு முன்பாக அவர் இறைவனடி சேர்ந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

சற்றேறக்குறைய 85 வயதான ஆற்காடு வீராசாமி தற்போது வரையில் உயிருடன் இருக்கின்ற சூழ்நிலையில், அண்ணாமலை இப்படி பேசியது உண்மை தன்மை அறியாமல் அந்த காணொளியை அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.

கொள்ளுப்பேரனின் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று கொண்டிருந்தார் எங்களுடைய ஆருயிர் ஆற்காட்டார் என தெரிவித்திருக்கிறார் கலாநிதி வீராசாமி.

எங்களுடைய இயக்கத் தலைவர்கள் தொடர்பாக எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் தலைவர் அண்ணாமலை என்னுடைய தந்தை தொடர்பாக தவறான கருத்தை தெரிவித்ததற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக இருக்கிறார் என்றும் பலருக்கு நன்மை செய்து வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

 

இப்படி நாகரிகமற்ற முறையில் உளறிக் கொண்டிருப்பதை அண்ணாமலை இனிவரும் காலங்களிலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எதிர்வினை இது போன்று சாதாரணமாக இருக்காது என கடுமையாக எச்சரிக்கிறேன் என்றும் கலாநிதி வீராசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இப்படியான நிலையில், தன்னுடைய பேச்சுக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்ற அவர், உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளுடன் உங்கள் அனைவருடைய அரவணைப்புடன் நன்றாக வாழ்வதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

 

மேலும் நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து விட்டார் என்று தெரிவித்த கருத்துக்காக வருத்தம் தெரிவிக்கின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.