தாலிபான்கள் புதிய அரசு பதவி ஏற்பு விழா ரத்து! நேட்டோ படைகளின் நெருக்கடியின் காரணமாக தாலிபான்கள் அறிவித்த முக்கிய முடிவு!

0
86

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை கொண்டு இருந்த அமெரிக்க ராணுவ படையினர் திடீரென்று நாடு திரும்பினார்கள். இதன் காரணமாக, அந்த நாட்டை தாலிபான் தீவிரவாத அமைப்பினர் கைப்பற்றினார்கள்.ஆனால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மட்டும் அமெரிக்க படையினர் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரையில் அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கு காலக்கெடு விதித்தது. இதனையடுத்து கடந்த 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்த கடைசி இராணுவ வீரரும் வெளியேறினார்.

ஆகவே ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்க ஆரம்பித்தனர்.இதனை அடுத்து பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளுக்கு யார்யார் நியமிக்கப்படுவது என்ற முடிவை தாலிபான் அமைப்பு வெளியிட்டது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று புதிய அரசு அமையும் என்று தாலிபான்கள் அறிவித்திருந்தார்கள். திடீரென்று அந்த பதவியேற்பு விழாவை ரத்து செய்து இருக்கிறார்கள். தலிபான் அமைப்பினர் நட்பு நாடுகளும், கூட்டமைப்புகளும், கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, தாலிபான்கள் இந்த விழாவை ரத்து செய்ததாக தகவல் கிடைத்திருக்கிறது.

சென்ற 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். இந்த சூழ்நிலையில், அதே வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் அல்கொய்தா இயக்கத் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட அந்த சமயத்தில் அவர்களுக்கு தாலிபான்கள் அடைக்கலம் தந்ததால் அவர்கள் மீது அமெரிக்கா ராணுவம் போர் தொடுத்தது.

இதன்காரணமாக, அப்போது தாலிபான்களின் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது. அதன் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு கடந்த 2004ஆம் வருடம் புதிய அரசு அமைந்தது. அன்றிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையில் அதிபராக ஹமீது கர்சாய் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அஸ்ரப் கானி அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் நீடித்தார்.

இந்த இடைப்பட்ட 20 வருடங்களில் தாலிபான்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டார்கள். தலிபான்களுக்கும், அமெரிக்கா படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் படையினருக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். ஆனாலும் இந்த போரில் முழு வெற்றி கிடைக்கப் பெறவில்லை. இதனை அடுத்து சென்ற மாதம் 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க நேட்டோ படைகள் முழுமையாக தங்களை வெளியேற்றிக் கொண்டன.

இதனைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு வந்தது அஸ்ரப் காணியும் காபூலில் இருந்து தப்பி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையும் என்று தாலிபான்கள் தெரிவித்து வந்தார்கள். இதனடிப்படையில் புதிய பிரதமராக முல்லா ஹஸன் நியமிக்கப்பட்டார்.

இவர் தலைமையின்கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவை பட்டியலும் வெளியாகியது அந்தப் பட்டியலில் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த புதிய அரசு இன்றைய தினம் ஆட்சியை அமைக்கும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதாவது அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமாக, இருந்த அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தால், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தாலிபான்கள் இன்று அதே தினத்தில் புதிய அரசை அமைப்போம் என்று அறிவித்து இருந்தார்கள்.புதிய அரசின் பதவியேற்பு விழாவிற்கு சீனா, கத்தார், ஈரான், ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்டோரையும் அழைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் சமயத்தில் அமைய இருப்பதால் அதில் கலந்து கொள்ள மாட்டோம் என்று பல நாடுகள் தெரிவித்து விட்டார்களாம்.

இதற்கு இடையில் தாலிபான்கள் மனிதாபிமானம் அற்ற அடிப்படையில் ஆட்சியை பிடித்தது தவறு என்ற காரணத்தாலும் லட்சக்கணக்கானோர் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்த தினத்தில் பதவியேற்பது சரியான முயற்சி கிடையாது என்று தெரிவித்ததோடு, பதவி ஏற்பு விழாவை நிறுத்திவைக்க அறிவுறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கத்தார் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது.

இந்த சூழ்நிலையில் தான் இன்று தாலிபான்கள் அரசின் பதவி ஏற்பு விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசின் கலாச்சார ஆணையும் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது சென்ற சில நாட்களுக்கு முன்பாகவே தாலிபான்களின் புதிய அரசு அமைக்கும் விழா ரத்து செய்யப்பட்டுவிட்டது. பொதுமக்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்ற காரணத்திற்காக, அமைச்சரவையின் ஒரு பகுதி மட்டும் பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது ஆனால் இன்றைய தினம் அந்த விழா ரத்து செய்யப்பட்டுவிட்டது.