முதலமைச்சரின் திடீர் வருகை! அதிர்ச்சியான பெண்!

0
75

மாமல்லபுரம் பூஞ்சேரியில் இருக்க கூடிய பழங்குடி குடியிருப்பில் இருக்கும் அஸ்வினி அவர்கள் வீட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார்.

அண்மையில் தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நரிக்குறவ பெண் அஸ்வினி மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட சென்ற சமயத்தில் தங்களை துரத்தியதாகவும், பெண்கள் இலவச பேருந்தில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்து இருந்ததாகவும், கவலை கூறியிருந்தார்.

அதோடு நாங்கள் படிக்கவில்லை என்று தானே இவ்வளவு கேவலமாக பார்க்கிறார்கள் என்று குழந்தைகளும் வளர்ந்து படித்து நல்ல நிலைக்கு வருவார்கள் உங்களுக்கு எங்களுடைய ஓட்டு வேண்டும் நாங்கள் வேண்டாமா? என கவலை நிறைந்த ஆவேசத்துடன் உரையாற்றியிருந்தார் அஸ்வினி.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, இந்த காணொளி வெளியான அடுத்த வாரமே அதே பெருமாள் கோவிலில் அஸ்வினிடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்த புகைப்படமும் வைரலாக பரவியது.

அமைச்சர் அந்த பெண்ணுடன் அமர்ந்து உணவு உட்கொண்ட பின்னர் அந்த பெண்ணுடன் கலந்துரையாடியதாக தெரிகிறது அப்போது அஸ்வினி பல கோரிக்கைகளை அமைச்சரிடம் வைத்திருக்கிறார். அதாவது எங்கள் மக்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி மற்றும் வருமான, இருப்பிட சான்றிதழ்கள் எதுவும் இல்லை எங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் அங்கு வசித்து வருகிறோம் என அமைச்சர் சேகர்பாபு இடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில் நேற்றைய தினம் நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி இருக்கின்றார்.

இதனையடுத்து பழங்குடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்று ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். அப்படியே அந்த பகுதியில் இருந்த அஸ்வினி வீட்டிற்கும் முதலமைச்சர் சென்றிருக்கிறார்.

தன்னுடைய இல்லத்திற்கு முதலமைச்சர் வந்திருக்கிறார் என்பதை நம்ப முடியாத அஷ்வினிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, உடனடியாக அவர் முதலமைச்சரின் காலில் விழுந்தார். முதலமைச்சர் காலில் எல்லாம் விழக்கூடாது என தெரிவித்தார், அதன் பின்பு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த முதலமைச்சர் அஸ்வினிடம் குடும்பத்தில் எத்தனை பேர்? என்ன செய்கிறார்கள்? என குடும்ப நிலவரம் தொடர்பாக விசாரித்தார். தன்னுடைய வீட்டிற்கு முதலமைச்சர் வந்தது மிகவும் மகிழ்ச்சி என கூறினார் அஸ்வினி.

இதனையடுத்து பழங்குடி மக்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார், அங்கே கூடியிருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.