மாணவர்களே உஷார்! பேருந்தில் இவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவீர்கள்!
கடந்த சில மாதங்களாகவே அரசு பேருந்தில் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் நின்று மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
அதனை தொடர்ந்து போலீசார் சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.ஆனால் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது குறையவில்லை.
தற்போது சாலை போக்குவரத்து மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அதில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் மது அருந்தி விட்டு இருசக்கரவாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்தாலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சாலை விதிகளை மீறுபவர்களை பொதுமக்கள் யார்வேண்டுமானாலும் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் போலீசார் சார்பில் காண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சாலை விதிகளை மீறும் வாகனங்களின் எண்களை வைத்து அவர்களின் வீட்டிற்கே அபராத தொகைக்கான ரசீது அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
அதுபோல தற்போது மாணவர்கள் பேருந்துகளில் எல்லை மீறுவதை பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து காவல் துறைக்கு அனுப்பி வருகின்றனர்.அதனை போலீஸார் சேகரித்து வைத்துள்ளனர்.அதன்படி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் தற்போது பொதுமக்கள் அனுப்பிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் மற்றும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் போன்றவைகளை வைத்து அத்துமீறும் செயலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது.
பொதுவாக மாணவர்கள் காலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் பொழுதும் மற்றும் மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் தான் இவ்வாறான பிரச்சனைகள் எழுந்து வருகின்றது.அதிலும் ஒரு சில மாணவர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாணவர்கள் தொடர்ந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதால் எல்லை மீறும் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.