தலைநகர் சென்னையில் சோர்ந்துபோன புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

0
85

புதிய வகை நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, மெரினா கடற்கரை சாலைகளில் வாகன போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் அனைத்து சாலைகளிலும் அத்தியாவசிய பணிகள் மற்றும் முக்கிய தேவைகளுக்காக செயல்படுபவர்களை தவிர மற்ற வாகனங்களில் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கடுமையான கட்டுப்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே பெரிய தடையாக இருந்தது. இந்த நிலையில், அனைத்து சாலைகளிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், அதிவேகமாக செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை செய்தார்கள். இதற்கிடையில் நேற்று இரவிலும் இந்த சோதனை நீடித்தது.

மழையும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை இதன் காரணமாக, பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உண்டானது. ஏற்கனவே காவல்துறையினர் அறிவுரை வழங்கி அதன் அடிப்படையில் வீடுகளில் குடும்பத்தினரோடு சேர்ந்து பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். விருந்து தடபுடல் நடைபெற்றன கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பலத்த மழையின் காரணமாக, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மிக எளிமையாக மாற்றி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து சாலைகளிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.